பாலியல் புகார்களில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: பாலியல் புகார்கள் மீது தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை பெருமாநகரில் பாரம்பரியப் பெருமை பேசும் பத்ம சேஷாத்திரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபால், பாலியல் புகார்களில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கான பயிற்றுநர் நாகராஜன் என்பவரும் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.   

இது போன்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளை தப்பிக்க செய்யும் உணர்ச்சி பிரச்னைகளை உசுப்பிவிட்டு கவனம் திசை திருப்புவதை விசாரணை அமைப்புகளும், நீதித்துறையும் எச்சரிக்கையாக விலக்கி வைத்து, பாலின சமத்துவம் நோக்கி சமுகம் நகர்ந்து செல்லும் பண்பு வளர்ச்சிக்கு உதவும் முறையில் நேர்மையான விசாரணைக்கும், நியாயம் கிடைக்கவும் உதவ வேண்டும். பாலியல் புகார்களில் கைதாகியுள்ள ராஜகோபால், நாகராஜன் ஆகியோரின் குற்றச்செயலுக்கு ஆதரவாகவும், துணையாகவும் இருந்தவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்று தர வேண்டும்.இவ்வாறு முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: