சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெயில் தாக்கம் 3 டிகிரி அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் இயல்பை விட 3 டிகிரி வெயில் அதிகமாக கொளுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு: வெப்பசலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலைையொட்டிய மாவட்டங்கள், தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 31 முதல் 1ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், சூறைக்காற்றுடன் (30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 மற்றும் குறைந்தபட்சம் வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 1ம் தேதி கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும், 2ம் தேதி தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் இந்த தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: