சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்த கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடை பணியாளர்களின் விவரங்களை அனுப்பி வைக்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எல்.சுப்பிரமணியன் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எல்.சுப்பிரமணியன் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் சில விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப் மூலமாக அவ்வபோது செய்திகள் பெறப்படுகின்றன. கடந்தாண்டில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இரண்டு நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு தலா 25 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து பெற்று வழங்கப்பட்டுள்ளது.