கொரோனாவில் இருந்து தமிழகத்தை காக்க 10 கோடி தடுப்பூசி வேண்டும்: மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான  டி.ஆர்.பாலு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழகத்துக்கு, மாதத்துக்கு 2.5  கோடி தடுப்பூசிகளை தரவேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து டி.ஆர்.பாலு எழுதிய கடிதம்: கொரோனா 2வது அலை வேகமாக பரவிவரும் நேரத்தில், மத்திய அரசால் தமிழகத்துக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் அளவை  அதிகரிக்க வேண்டும் என தங்களை கடந்த 20ம் தேதி நேரில் சந்தித்து, கேட்டிருந்தேன்.

தமிழ்நாடு மிகப் பெருமளவில் கொள்ளை நோய் தொற்று நிவாரணத்தில், மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா  போன்ற மாநிலங்களில் நோய்த் தொற்றின் வேகம் குறைந்து வரும் நிலையில், இப்போதாவது, தமிழகத்திற்கான தடுப்பூசி மருந்துகளின்  எண்ணிக்கையை அதிகரித்து வழங்க, மத்திய அரசு  ஆவன செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள, மிக மிக கவலைக்கிடமான  நிலையில், நோய்த் தொற்றின் தாக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த, 18 வயதிற்கும் மேற்பட்ட தமிழக மக்களுக்கு, ஒரு மாதத்திற்கு 2.5  கோடி தடுப்பூசி மருந்துகள் வீதம், அடுத்த நான்கு மாதங்களுக்கு, 10 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்க, மத்திய அரசு ஆவன செய்ய  வேண்டும். தமிழகத்தினால் இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசி மருந்துகளுக்கு, மத்திய அரசு, 100 சதவீத நிதி உதவி அளித்து, தமிழக அரசின்  தடுப்பூசி இலக்கை எட்ட, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Related Stories: