சிவகாசி : சிவகாசி பகுதியில் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. அசோகன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டிஆர்ஓ மங்களராமசுப்பிரமணியன், சப்-கலெக்டர் தினேஷ்குமார், யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ், திட்ட அலுவலர் ஜெயக்குமார், தாசில்தார் ராமசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜமோகன், ராமராஜ், நகராட்சி ஆணையாளர்கள் பார்த்தசாரதி, பாண்டித்தாய், டிஎஸ்பி இம்மானுவேல்ராஜ்குமார், டாக்டர் அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், கொரோனா தொற்று காரணமாக சிவகாசி பகுதியில் இதுவரை 31 பேர் இறந்துள்ளனர். இனிமேல் இறப்பு இருக்கக்கூடாது. ஊரகப்பகுதிகளில் அதிகமாக நோய் தொற்று இருக்கிறது. இதை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நகரில் பொது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். முழு ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகளை வீட்டின் அருகிலேயே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகாசி அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதால் தடுப்பூசி போடாதவர்கள் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் அதிகாரிகள் முழுமூச்சாக பணியாற்றி கொரோனா முற்றிலும் ஒழிக்க பாடுபடவேண்டும். அரசின் உத்தரவுகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு உரிய முறையில் அறிவுறுத்தல் வேண்டும் என்று பேசினார்.