சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆம்னி பஸ்களை பொறுத்தவரை சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக 350க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. இதில், 15 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்றுள்ளனர். இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் கூறியதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் நகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக கடந்த இரண்டு நாட்களாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.