சென்னை: மெரினா காமராஜர் சாலையில் வாகன விபத்தில் காயமடைந்த 2 பேரை, உதயநிதி ஸ்டாலின் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ராணி. இவர் உடல் நலக்குறைவால் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அதைதொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் அமரர் ஊர்தி மூலம் வீட்டிற்கு மதியம் கொண்டு சென்றனர். மெரினா காமராஜர் சாலையில் அமரர் ஊர்தி செல்லும் போது, பின்னால் திருவொற்றியூரை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரி பிரேம் நாத் தனது பைக்கில் உறவினர் சுரேஷ் என்பவருடன் சென்று கொண்டிருந்தார். திடீரென அமரர் ஊர்தியை முந்தி செல்ல பிரேம் நாத் முயன்றார். இதில் நிலைத்தடுமாறி பைக் கீழே விழுந்தது. இதில் பைக் ஓட்டி வந்த பிரேம் நாத் மற்றும் அவரது உறவினர் சுரேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.