சென்னை: அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் சித்த மருத்துவர் குழந்தை பிறந்து 3 நாட்களிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வளசரவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கலைபிரியா (27). இவர் சென்னை, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் உதவி சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கர்ப்பிணியான இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்துள்ளது. கடந்த 9ம் தேதி சிகிச்சைக்காக வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்கள் குழந்தைக்கு தொற்று பாதிப்பு இல்லை, குழந்தையின் எடையும் போதுமானதாக உள்ளதால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்து விடலாம் என்று கூறியுள்ளனர்.