7 பேர் விடுதலை விவகாரம: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதிக்கு கடிதம்

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில்  தண்டிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய  வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று  தீர்மானம் நிறைவேற்றியது.  அதை தமிழக ஆளுநருக்கு அனுப்பியுள்ளதையும், ‘அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத் தான் இருக்கிறது எனக் கூறி, தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு அரசின்  அமைச்சரவைத் தீர்மானத்தை அனுப்பி வைத்துள்ளார்.

 அதை சுட்டிக்காட்டி 19.5.2021 அன்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மேற்கண்ட ஏழு பேரும் 30 ஆண்டுக்கும் மேலாக சிறையில்  வாடுகிறார்கள். உச்ச நீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள  கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ளது.  ஏழு பேரையும் விடுதலை செய்ய 9.9.2018 அன்று தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நேரில் அளித்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: