கடந்த ஓராண்டு காலமாக டாஸ்மாக் மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தவில்லை. இதனால் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வருமான இழப்பை ஈடுகட்ட உள்ள ஒரே வருமான ஆதாரம் டாஸ்மாக் வருவாய் என்று அரசு கருதுகிறது. இதனால் ஊரடங்கு முடிந்ததும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயரும் என்று கூறப்படுகிறது. 15 நாள் ஊரடங்கில் டாஸ்மாக் வருமானம் 2020 கோடி ரூபாயும், பத்திரப்பதிவுத்துறை வருமானம் 500 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று பெட்ரோல், டீசல் விற்பனை 70 சதவீதம் குறைந்துவிட்டதால் அதன் மூலம் கிடைக்கக்கூடிய மதிப்புக்கூட்டு வரி வருவாயும் குறைந்திருக்கிறது. இதனால் ஊரடங்கால் சிரமத்தில் இருக்கும் மக்களை பாதிக்காத வகையில் அரசின் வருமான இழப்பை ஈடுகட்ட டாஸ்மாக் மதுபானங்களின் விலையை கூட்டுவதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை என்று நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.