விசிக பொருளாளர் முகமது யூசுப் மறைவு: திருமாவளவன் இரங்கல்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப். இவர், கடந்த ஏப்ரல் 25ம் தேதி, தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். தொற்றின் தீவிரம் அதிகமானதால் சென்னை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார். இதற்கு கட்சி திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டு பதிவில், ‘இறுதி மூச்சுவரையில் எனக்கு தோளோடு தோள்கொடுத்து நின்றவர். அளவிலா அன்பை என்மீது அள்ளி கொட்டியவர். கண்ணியத்தின் திருவுருவாய், களங்கமில்லா நட்புக்கு சான்றாக வாழ்ந்தவர்.

கொள்கையில் உறுதியாக இருந்தவர். துரோக சிந்தனை துளியுமற்றவர். இளந்தலைமுறைக்கு வழிவிட்டு இயக்கம் வலுப்பெற இயங்கியவர். அம்பேத்கரின் கொள்கைகளை பேசி, ஜெய்பீம் என உரத்து முழங்கி வரலாற்று தடங்களை பதித்தவர். அவர் இன்று நம்மோடு இல்லை என்பதை என்னுள்ளம் ஏற்கவில்லை. கண்ணியம் மிகுந்த தோழமைக்கு அடையாளமாய் கடைசி மூச்சுவரையில் வாழ்ந்து காட்டிய முகமது யூசுப் மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: