சென்னை,: முழு முடக்கம் காரணமாக சார்பதிவாளர் அலுவலகங்கள் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை செயல்படாது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. அதபோல ஆர்டிஓ அலுவலகங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் 24ம் தேதி வரை முழு முடக்கம் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில், அத்தியவாசிய பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலகங்கள் மட்டுமே செயல்படும் என்று அறிவித்து இருந்தது. அதன்படி தலைமை செயலகம், சுகாதாரத்துறை, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மின்சாரம், உள்ளாட்சி அமைப்புகள், வனத்துறை, கருவூலத்துறை, சமூக நல மற்றும் பெண்கள் உரிமை அலுவலகம் தவிர மற்ற அலுவலகங்கள் மூடப்படும் என்று நேற்று முன்தினம் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.