தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை: தமிழகத்தில்  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  சேப்பாக்கம் -திருவல்லிகேணி தொகுதியில் 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைக்கிறது. வரும் 7ம் தேதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

 இந்நிலையில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில்  சந்தித்து நலம் விசாரித்தார்.  தேர்தலில்  வெற்றி பெற்றதற்காகவும்,  விஜயகாந்த்திடம் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்.  அப்போது எல்.கே.சுதீஷ், பொன்னாடை போர்த்தி உதயநிதி ஸ்டாலினை வரவேற்றார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். முன்னதாக, திமுக வெற்றி குறித்து  விஜயகாந்த் தனது டிவிட்டர் பதிவில், “தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும்  வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று  வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முந்தைய காலகட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்துள்ளார். ஆனால், உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு சென்று விஜயகாந்த்தை சந்திப்பது இதுதான் முதல்முறை என்பது  குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியல் களத்தில் திமுக முன்னெடுத்து வரும் அரசியல் நாகரீகத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: