பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா, கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கற்பகாம்பாள், கபாலீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி நேற்று காலையிலேயே பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். காலை 7.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது.

அதன் பிறகு தேர் புறப்பட்டது. இந்த தேர் 96 அடி உயரமும், 300 டன் எடையுடன், நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. அதன் பிறகு கற்பகாம்பாள் அருள்பாலித்தபடி வந்த தேர் வந்தது. இதை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து

இழுத்தனர். இதனையடுத்து சுப்பிரமணியர் தேர், சண்டிகேசுவரர் தேர் ஆகியவை வலம் வந்தன. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். சிவ வாத்தியம் முழங்க தேர் வலம் வந்தது. அப்போது அங்கு காத்திருந்த பக்தர்கள் சாமிக்கு அர்ச்சனை செய்தனர். 4 மாட வீதிகளின் பல இடங்களில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மயிலாப்பூரில் பக்தர்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் கார்னரில் இருந்து மயிலாப்பூர் மாட வீதிகளுக்கு வாகனங்கள் அனுமதிக்கவில்லை. தேர்த்திருவிழா காரணமாக, மயிலாப்பூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று (4ம் தேதி) பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா நடக்கிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களும் பல்லக்குகளில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வருகிறார்கள். வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்துமூன்று நாயன்மார்களோடு வரும் காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என கோயில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. நாளை மறுநாள் 5ம் தேதி ஐந்திருமேனிகள் விழா நடக்கிறது. 6ம் தேதி பகலில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

  • பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்

    தேரோட்ட நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் துறை சார்பில் ஒரு இணை ஆணையர், 5 துணை ஆணையர்கள் மற்றும் 1,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர். கோயிலை சுற்றி 68 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. பொதுமக்கள் யாருக்கேனும் உடல்நலக்குறைவு குறைவு ஏற்பட்டால் விரைந்து முதலுதவி சிகிச்சை அளிக்க வசதியாக மருத்துவ உதவி மையமும், ஆம்புலன்ஸ் வாகனங்களும், 2 தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு வாகனங்களும் கோயிலை சுற்றி தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

The post பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: