தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு ஏப்.30ம் தேதி தேர்தல் மே 1ல் வாக்கு எண்ணிக்கை: ஐகோர்ட்டில் தயாரிப்பாளர் கவுன்சில் தகவல்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் ஏப்ரல் 30ம் தேதி நடைபெற உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகளுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்கிற அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நீதிமன்றமே நியமிக்க உத்தரவிடக் கோரியும் அதன் உறுப்பினர்கள் கமல்குமார், சீனிவாசன், விடியல் ராஜ் உள்ளிட்ட எட்டு தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ்ஏற்கனவே, தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் மற்றும் நீதிபதி வி.பாரதிதாசன் ஆகியோரை நியமித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணா ஆஜராகி, நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 1ம் தேதி நடைபெற உள்ளது என்றார்.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் வகையில் அனைத்து நடைமுறைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். தேர்தல் நடைபெறும் அன்றே வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மெமோ தாக்கல் செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். தேர்தல் நடத்தப்பட்டது குறித்து தேர்தல் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு ஏப்.30ம் தேதி தேர்தல் மே 1ல் வாக்கு எண்ணிக்கை: ஐகோர்ட்டில் தயாரிப்பாளர் கவுன்சில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: