2018ல் முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் நில மோசடியில் ஈடுபட்டவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன்? எஸ்பி ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் நரசிம்மன். தமிழ்நாடு மருத்துவ சேவைதுறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் காட்டாங்கொளத்தூர் கோனாதி கிராமத்தில் வரதராஜுலு என்பவரிடம் இருந்து 25 சென்ட் நிலம் வாங்கி, செங்கல்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் 1964ல் பதிவும் செய்துள்ளார். இதுவரை இந்த நிலம் நரசிம்மனின் ஆளுமையில் உள்ளது. இந்நிலையில், அவரது நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த நிலத்தில் ஒரு கட்டிட கான்ட்ராக்டர் கட்டிடத்தையும் கட்டியுள்ளார். இதுபற்றி நரசிம்மன் கேட்டபோது, அங்கிருந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, நரசிம்மன் கூடுவாஞ்சேரி போலீசில் 2017ல் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில், வேளச்சேரியை சேர்ந்த வீரபத்திரன், முனுசாமி, கட்டிட கான்ட்ராக்டர் குமாரராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது, போலி ஆவணம் தயாரித்தல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி முனுசாமி, குமாரராஜா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ல் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, தனது நிலத்தில் உள்ள கட்டிடத்தை இடித்து அகற்றுமாறு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் நரசிம்மன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி கிருபாகரன், தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செங்கல்பட்டு எஸ்பி பதில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் முன் ஜாமீன் மனு 2018ல் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை, என எஸ்பியின் பதில் மனுவில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இதுகுறித்து நேரில் விளக்கம் அளிக்க காஞ்சிபுரம் எஸ்பி (தற்போது செங்கல்பட்டு எஸ்பி) ஏப்ரல் 30ம் தேதி (இன்று) வீடியோ கான்பரன்சில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

Related Stories: