சட்ட விதிகளின்படி கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா? அறநிலையத்துறை, வனத்துறை அறிக்கை அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

சென்னை: சட்ட விதிகளின்படி, கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகளின்படி, கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாகவும், பாகன்களை நியமிப்பது தொடர்பாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு வனப்பகுதியில், யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானையைப் பாகன் அடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது குறித்து நீதிபதிகள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் தனியார் மற்றும் கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படும் வகையில், புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுப்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், வளர்ப்பு யானைகள் பராமரிப்புச் சட்ட விதிகளைக் கோயில் நிர்வாகங்கள் முறையாகப் பின்பற்றுகின்றனவா என, இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தமிழக வனத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படும் வகையில், புதிய கொள்கை வகுப்பது தொடர்பாக யானைகள் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கடந்த 23-ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டு, அரசுக்குப் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமான அறிக்கையைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தேர்தல் ஜுரத்தில் மாநில அரசு இருப்பதாகக் கூறி, வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், யானைகள் உள்ளிட்ட விலங்குகளைத் துன்புறுத்துவதை அனுமதிக்க முடியாது எனவும், அவற்றை முறையாக நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

யானைகள் மனிதாபிமான, கண்ணியமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும், துன்புறுத்தக் கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். யானைகள் புத்திசாலியான விலங்கு எனவும், அவற்றின் உள்ளுணர்வு மனிதர்களுக்குக் கிடையாது எனவும் தெரிவித்த நீதிபதிகள், தனியார் மற்றும் கோயில்களில் உள்ள வளர்ப்பு யானைகளைப் பராமரிப்பது தொடர்பான திட்டவட்டமான கொள்கையை வகுத்துத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். வளர்ப்பு யானைகள் பராமரிப்புச் சட்ட விதிகள்படி, கோயில் யானைகள் பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்தும், இந்த விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்தும் இந்து சமய அறநிலையத்துறையும், வனத்துறையும் இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: