'55 வயதுக்கு மேற்பட்டவர்களை 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியமர்த்தக்கூடாது': தமிழக அரசு உத்தரவு..!!

சென்னை: 55 வயதிற்கு மேற்பட்ட நபர்களை 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில், 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் சளி, இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளவர்களை 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியமர்த்த கூடாது  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களை பணிக்கு பயன்படுத்தக்கூடாது எனவும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம், தனிமனித இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறைந்த அளவு நபர்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கைகளை கழுவுவதற்கான வசதி செய்து தரப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

வேலையாட்கள் கொண்டு வரும் உணவு பொருள், தண்ணீரை பரிமாற கூடாது என கூறியிருக்கும் தமிழக அரசு, 45 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

Related Stories: