திருவொற்றியூர்: திருவொற்றியூர் நவீன தகன மேடை பழுதானதால், நேற்று ஒரே நேரத்தில் 8 உடல்கள் நடைபாதையில் எரிக்கப்பட்டன. இதனால், சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பட்டினத்தார் கோயில் தெருவில் மாநகராட்சியின் நவீன எரியூட்டு தகன மேடை உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளில் இறந்தவர்களின் உடல் கொண்டு வரப்பட்டு எரியூட்டப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த எரியூட்டு தகன மேடை போதிய பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி பழுது ஏற்படுவதும், பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் பழுதை சரி செய்வதுமாக உள்ளனர். ஆனாலும், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இந்த எரியூட்டு தகன மேடையில் வைத்து பிணத்தை எரிக்கும்போது இயந்திர தேய்மானத்தால், சிமினி வழியாக புகை செல்லாமல், பக்கவாட்டு வழியே வெளியேறி வீடுகளில், புகை படர்வதால், சுற்று வட்டார குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மூச்சுத் திணறலாம் அவதிப்படுகின்றனர்.