சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் ஆட்டோ, டாக்சி ஓடாததால் வெளியூர்களில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த பயணிகள் தவிப்பு: அதிக கட்டணம் கொடுத்து வீட்டுக்கு சென்றனர்

சென்னை: முழு ஊரடங்கான நேற்று வெளியூர்களில் இருந்து ரயில் மூலம் சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ரயில்நிலையங்களுக்கு வந்த பயணிகள் ஆட்டோ, டாக்சி ஓடாததால் ரயில் நிலையத்தில் தவித்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களான பீகார், உத்தரகாண்ட், டெல்லி, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கும், கோவை, திருப்பூர், சேலம் போன்ற பகுதிகளுக்கும் தினசரி 45 சிறப்பு ரயில்களும், மறு மார்க்கமாக அங்கிருந்தும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதேபோல், எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து செங்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை போன்ற பகுதிகளுக்கும், மறு மார்க்கமாக அங்கிருந்து எழும்பூர் ரயில்நிலையத்திற்கும் 20க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, கடந்த 21ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனால் நீண்ட தூரம் இயக்கப்படும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் ரயில் சேவைகள் மட்டும் வழக்கம் போல் இயக்கப்பட்டத்தால் பயணிகள் எப்போதும் போல் ரயில் சேவையை பயன்படுத்தி வந்தனர். அதன்படி நேற்று தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர முன்பதிவு செய்தவர்கள் வழக்கம் போல் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் சென்னை எழும்பூர், ெசன்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு வந்தடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சென்னையில் எந்தவிதமான வாகனங்களும் இயக்கவில்லை. குறிப்பாக ரயில் நிலையங்களில் உள்ள ஆட்டோ, டாக்சி போன்றவையும் இயக்கப்படாததால் தென்மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு வந்து இறங்கிய பயணிகள் தங்களுடைய வீடுகளுக்கு செல்ல வழியின்றி தவித்தனர்.

ஒரு சிலர் தங்களின் உறவினர்களை தொடர்பு கொண்டு வரவழைத்து, பைக்கில் வீட்டிற்கு சென்றனர். சிலர், ரயில் நிலையங்களில் இருந்த ஆட்டோ, டாக்சியை அழைத்தபோது, ‘ஆட்டோவில் நீங்கள் வருவீர்கள், ரயில் டிக்கெட்டை காண்பித்து சென்று விடுவோம். உங்களை டிராப் செய்துவிட்டு நாங்கள் தனியாக வந்தால், போலீசார் பிடித்து அபராதம் போடுவார்கள், வாகனத்தை பறிமுதல் செய்தால் என்ன செய்வது என்று கூறி, வரமறுத்தனர். ஒரு சிலர் குறைந்த தூரத்துக்கே ரூ.500-1000 வரை வாங்கி ஏற்றிச் சென்றனர். இதனால் ேநற்று ரயிலில் வந்த பயணிகள் கடும் சிரமத்திக்குள்ளானாகினர்.

Related Stories: