கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் கடந்த 2 நாளில் 3 போலீசார் உயிரிழப்பு: தமிழகத்தில் 24ம் தேதி வரை 6 காவலர்கள் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3 போலீசார் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகத்தில் கடந்த 24 நாட்களில் 6 போலீசார் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 13,776 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் நேற்று முன்தினம் 3,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 78 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் கொரோனாவின் இரண்டாவது அலையின் வேகமும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.

அதன்படி சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த கருணாநிதி (48). இவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உளவுத்துறை காவலராக அயல் பணியில் இருந்தார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் காலை உயிரிழந்தார். மேலும் சென்னை டிஜிபி அலுவலகத்தில் உளவுத்துறை போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் முருகேசன்(51). எம்.கே.பி நகர், கொடுங்கையூரில் வசித்து வந்தார். முருகேசனுக்கு கடந்த 15ம் தேதி இரவு 11 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்படவே கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி ரோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. மூச்சுத்திணறல் காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மோசமடைந்ததால் கடந்த 19ம் தேதி அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கோவிட் தீவிர சிகிச்சையில் வார்டில் அனுமதிக்கப்பட்டு அங்கியேயும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கொரோனா நெகடிவ் வந்த நிலையில் இரவு 7 மணி அளவில் உயிரிழந்தார்.

அதேபோல் அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வருபவர் மகாராஜன் (38).சென்னை சிந்தாதிரிப் பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் கடந்த 14ம் தேதி கொரோனா தொற்றால் பாதிப்படைந்து ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இதையடுத்து சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் 3 போலீசாரும், தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி வரை 6 போலீசார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: