வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும்படி மிரட்டியதாக அதிமுக வேட்பாளர், டிஎஸ்பி மீது வழக்கு பதியக்கோரி மனு: உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள இடக்குடி கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரும், அதிமுகவைச் சேர்ந்தவருமான தங்கமணி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  பூம்புகார் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் எம்.எல்.ஏ., பவுன்ராஜும்,  கும்பகோணம் டி.எஸ்.பியான அவரது மகன் பாலகிருஷ்ணனும் தேர்தலுக்கு இரு நாட்கள் முன்பாக எனது வீட்டுக்கு வந்து, 5 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாக்காளர்களுக்கு வினியோகிக்கும்படி கூறினர். அதற்கு மறுத்ததால் என் மீது பொய் வழக்கு தொடர்வதாக மிரட்டினர்.

இது சம்பந்தமாக பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, அதிமுக வேட்பாளர் மீதும், டி.எஸ்.பி. மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, குற்ற விசாரணை முறை சட்ட பிரிவின்படி, மனுதாரர் முதலில் உரிய கீழமை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தது.

Related Stories: