அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோயில்களில் இன்றைய சனி பிரதோஷத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

* பிற்பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் இல்லை

* ஆன்லைனில் ஒளிபரப்ப முடிவு

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோயில்களில் இன்று நடக்கும் சனி பிரதோஷத்தில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும், பிற்பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்றும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா  பாதிப்பு காரணமாக கோயில்களில் பக்தர்களை அனுமதிக்காமல் கோயில்களுக்குள்ளேயே சுவாமி வீதியுலா நிகழ்ச்சியை நடத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்ள பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று சிவன் கோயில்களில் நடைபெறும் சனி பிரதோஷ பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மேலும், அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் சனி பிரதோஷ வழிபாட்டை ஆன்லைன் மூலம் ஒளிரபரப்பவும் அறிவுரை வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாட்டு நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணியளவில் நேரடியாக ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்படவுள்ளது.

 

இந்த நிகழ்ச்சி //www.youtube.com/c/MYLAPORE KAPALEESWARARTEMPLE என்கிற யூ டியூப் சேனலில் நேரலையில் இன்று மாலை 4.30 மணிக்கு நந்தி அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் உட்புறப்பாடும் பக்தர்களின் கோரிக்கையின்படி ஒளிபரப்பட உள்ளது. இதுகுறித்து, திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில்  ஒன்றான பிரதோஷ வழிபாடு ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பக்தர்கள்  https://www.youtube.com/c/Thiagarajaswamy Vadivudaiyamman Temple Official என்கிற யூ டியூப் சேனல் மூலம் இன்று மாலை 4 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும், தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசித்து வடிவுடை அம்மன்  உடனுறை தியாகராஜ சுவாமி அருள் பெறலாம். சனி பிரதோஷத்தை முன்னிட்டு கொரோனா நோய் தொற்றை தவிர்க்க, பக்தர்கள் நலனை முன்னிட்டு, நண்பகல் 12 மணிக்கு மேல் கோயிலில் நேரடி தரிசனம் கிடையாது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: