மதுரை: மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் நாளான நேற்று அம்மன் எட்டு திசைக்கு சென்று போரிடும் நிகழ்ச்சியாக ‘‘திக்கு விஜயம்’’ நடந்தது. மாலை 6 மணிக்கு இந்திர விமானத்தில் மீனாட்சி அம்மன், சுவாமி சுந்தரேஸ்வரர் மாசி வீதிகளில் வலம் வருவது கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டு, ஆடி வீதிகளில் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கோயிலில் உள்ள மேற்கு ஆடி, வடக்கு ஆடி வீதியில் உள்ள அலங்கார திருமண மண்டபத்தில், இன்று காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடக்கிறது. திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே பார்த்துக்கொள்ள, கோயில் வெப்சைட் www.maduraimeenakshi.org மற்றும் யுடியூப், இந்து சமய அறநிலையத்துறை வெப்சைட்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.