ஆன்லைன் முறையை பயன்படுத்துங்கள்..! தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதே போல, ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. முழு பொதுமுடக்கத்தின் அத்தியாவசிய மற்றும் தேவைகள் தவிர பிற எந்த சேவைக்கும் அனுமதி கிடையாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

மருந்துகள், துப்புரவு பொருட்கள், ஆக்ஸிஜன், மருத்துவ சாதனங்கள், மருத்துவ ஜவுளி உற்பத்திக்கு மட்டுமே ஊரடங்கின் போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசு பேருந்துகள் உட்பட பொதுப் போக்குவரத்து ஏதும் செயல்படாது. இந்த நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், பயணிகள் ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யலாம். வழக்கமாக பயணம் மேற்கொள்ள டிக்கெட் எடுப்பதற்கான மையங்கள் மட்டும் செயல்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: