டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 25 நோயாளிகள் பலி... 60 பேர் உயிரிழக்கும் அபாயம்; கலங்கி நிற்கும் மருத்துவர்கள்!!

டெல்லி : டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 25 நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் உச்சம் அடைந்துள்ளது. பிரபல மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள், அவசர சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றனர். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளால் மருத்துவர்கள் செய்வதறியாது தவித்து  வருகின்றனர்.

பல்நோக்கு மருத்துவமனைகள் உட்பட 6 மருத்துவமனைகள் தங்களது முற்றிலும் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாக பகிரங்கமாக தெரிவித்துவிட்டனர். பிரபல மருத்துவமனைகள் பலவும் தங்களிடம் ஒரு சில மணி நேரங்களுக்கே ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளதால் நோயாளிகளின் உறவினர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.மேலும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பதாகவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 60 நோயாளிகள் அபாயக் கட்டத்தில் இருப்பதாகவும் மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.இதனால் உடனடியாக ஆக்ஸிஜன் விநியோகம் செய்யுமாறு டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் மருத்துவமனையின் இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: