ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய தலைவி, ஜெயா, குயின் படங்களுக்கு தடை விதிக்க முடியாது: ஜெ.தீபாவின் மேல் முறையீடு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை:  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் தமிழில் தலைவி என்ற பெயரில் இயக்குனர் ஏ.எல்.விஜய், இந்தியில் ஜெயா என்ற பெயரில் ஹைதராபாத்தை சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.   இதேபோல, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் என்ற இணையதள தொடரை  இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தயாரித்து முதல் பகுதியை வெளியிட்டுள்ளார்.  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், இணையதள தொடருக்கும்  தடை விதிக்க கோரி  ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  இந்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த மேல்முறையீடு மனு, நீதிபதிகள் சுப்பையா, சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 அப்போது தீபா தரப்பில்  படங்களில் தங்களுடைய குடும்பத்தினர் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், படத்தை வெளியிடுவதற்கு முன்பாக தன்னிடம் ஒப்புதல் பெற உத்தரவிட வேண்டுமென்றும் வாதிடப்பட்டது.  தலைவி பட இயக்குனர் ஏ.எல்.விஜய் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்பிரமணியன், தலைவி என்ற புத்தகத்தின் அடிப்படையிலேயே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. தீபாவிடம் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டார். மற்ற தரப்பு வக்கீல்களும் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்திருந்த நிலையில், நீதிபதிகள் நேற்று பிறப்பித்த தீர்ப்பில், தலைவி, குயின், ஜெயா ஆகியவற்றை வெளியிட தடை விதிக்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. தீபாவின் மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

Related Stories: