வேளச்சேரி வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு

சென்னை:  தேர்தல் விதிகளை மீறி வேளச்சேரி டான்சி நகர் தனியார் மருத்துவமனை அருகே கடந்த 6ம் தேதி  இரவு 7.30 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மொபட்டில் எடுத்து சென்ற 2 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து உதவி பொறியாளர் செந்தில்குமார், தூய்மை பணி மேஸ்திரி வேளாங்கண்ணி, தூய்மை பணியாளர் சரவணன் ஆகியோரை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இச்சம்பவம் குறித்து, வேளச்சேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். இதனையடுத்து, வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட மையம் 92ல் இன்று (17ம் தேதி) மறுவாக்குப் பதிவு நடத்த உத்தரவிட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, அதிமுக வேட்பாளர் எம்.கே. அசோக் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள்நேற்று முன்தினம் வாக்கு சேகரித்தனர். வேளச்சேரி டிஏவி பள்ளி வளாகத்தில் இன்று மறுவாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு 548 பேர் (ஆண்கள் மட்டுமே) வாக்களிக்க உள்ளனர். தேர்தல் அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர். நேற்று மாலை 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: