சென்னை: அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் தொடர்ந்து அத்துமீறல்கள் நடைபெறுவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை திமுக துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சந்தித்தனர். அப்போது வாக்கு எண்ணிக்கை மையங்களில் தொடர்ந்து அத்துமீறல்கள் நடைபெறுவதாக கூறி, புகார் மனு அளித்தனர். கோவை, திருவள்ளூர், சென்னை லயோலா கல்லூரி ஆகிய மையங்களில் வெளிநபர்கள் நுழைந்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார். நள்ளிரவில் லாரிகள் செல்வது சந்தேகத்தை எழுப்புவதாகவும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு லாரிகள் செல்வது ஏன்? என்றும் தற்காலிக கழிப்பறைகள் கொண்டுசெல்லப்படுவதாக கூறப்படும் விளக்கம் ஏற்கத்தக்கது அல்ல என்றும் பொன்முடி தெரிவித்தார்.