சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக பி.தனபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக புதுச்சேரி மாநில தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த பி.தனபால் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி கே.கோவிந்தராஜன் உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளராகவும், சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 8வது கூடுதல் நீதிபதி (சிபிஐ வழக்குகள்) எல்.லிங்கேஸ்வரன் தமிழ்நாடு ஜுடிசியல் அகாடமி இயக்குநராகவும், நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை நீதிபதி எம்.என்.செந்தில்குமார் சென்னை ஐகோர்ட் பதிவாளராக (ஜுடிசியல்)வும், ஐகோர்ட் விஜிலன்ஸ் கூடுதல் பதிவாளர் எம்.சாய்சரவணன் விஜிலன்ஸ் பதிவாளராகவும், தர்மபுரி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளை விசாரித்து வந்த கே.சீத்தாராமன், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் பதிவாளராக (ஆய்வு), கோவை மாவட்ட 4வது கூடுதல் நீதிபதி கே.பூர்ண ஜெயா ஆனந்த் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளராக (ஜுடிசியல்) நியமிக்கப்படுகின்றனர்.