ஜோலார்பேட்டை: ஏலகிரி மலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் கெஸ்ட் ஹவுஸில் மர்மநபர்கள் கதவை உடைத்து ஹார்டு டிஸ்க் திருடிச் சென்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மலையில் உள்ள மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. இங்கு அவ்வப்போது துரைமுருகன் வந்து ஓய்வெடுத்து செல்வது வழக்கம். இதனை திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அடுத்த புனிகாந்தூர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பராமரித்து வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கென கெஸ்ட் ஹவுஸ் பகுதியில் தனியறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தம்பதியினர் தூங்கிய பிறகு, அங்கு வந்த மர்மநபர்கள், கெஸ்ட் ஹவுசின் கதவை உடைத்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பணம் நகைகள் ஏதும் கிடைக்காததால், ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் தங்கள் உருவம் பதிவாகியிருக்கும் எனக்கருதி சிசிடிவி ஹார்டு டிஸ்கை திருடிச் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை கெஸ்ட் ஹவுசில் சுத்தம் செய்ய வந்த பிரேம்குமார் தம்பதியினர், கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஏலகிரி மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சென்று ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.