சென்னை: உள்கட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக, பாஜ, சிபிஐ (எம்) போன்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களின் உட்கட்சி தேர்தல்களை நடத்தி, அதற்குரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் வரை சட்டமன்ற தேர்தலை நடத்த தடை விதிக்கக்கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில், கடந்த 2 ஆண்டுகளாக அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. சட்டமன்ற தேர்தலுக்குள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் உட்கட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்கட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அதிமுகவுக்கு மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொரோனா தாக்கத்தைச் சுட்டிக்காட்டி உள்கட்சி தேர்தல் நடத்த அதிமுக தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், சட்டமன்ற தேர்தல் முடிந்து விட்டதால், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.