தமிழகத்தில் ‘அரியர்’ தேர்வு ரத்து இல்லை: தேர்வு நடத்த வேண்டும் : ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை:  தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வை ரத்து செய்தும் ‘ஆல்பாஸ்’ என்று அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பல்கலைக்கழக மானியக்குழு தரப்பு வக்கீல், தேர்வுகள் நடத்த வேண்டாம் என்று  தெரிவிக்கவில்லை என்று ெதரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசின் உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது.

ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறித்தும், எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் முழுமையான விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு  விசாரணையை ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், கல்வியின் புனிதத்தில் எந்த சமரசமும் இல்லாமல் ஏதேனும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்வது குறித்து தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் கலந்து பேசி ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Related Stories: