20 கம்பெனிகளின் துணை ராணுவப்படையினர் வருகை சென்னையில் 4 தொகுதிகள் அதிக பதற்றமானவை: மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தகவல்

சென்னை: சென்னை, மெரினா கடற்கரையில் வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் வடிவமைத்த மணல் சிற்பத்தை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் நேற்று பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்திலேயே குறைவான வாக்குப்பதிவு சதவீதம் உள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. ஏப்ரல் 6ம் தேதி ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் மீறும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக 435 புகார்கள் வந்துள்ளன.

அவற்றில் 422 புகார்கள் தீர்வு காணப்பட்டன. 4 புகார்கள் நிலுவையில் உள்ளன. மீதம் உள்ளவை பொய் புகார்கள். தற்போதைய நிலையில் 52 கோடி வரை சென்னை மாவட்டத்தில் பணம், பரிசுப் பொருள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் 21 தேர்தல் செலவின பார்வையாளர்கள் இருக்கின்றனர். 18 முதல் 20 கம்பெனிகளின் துணை ராணுவப்படையினர் சென்னை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். சென்னையில் 4 தொகுதிகளில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல் துறையின் உளவுப்பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: