சென்னை: ஆதார், ஓட்டர் ஐடி உள்ளிட்ட தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தும் ஆதாரங்களில் ஒன்றை வாங்கி மது விற்கலாமா என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் நா.பெரியசாமி அரசுக்கு எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் வருகிற 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, மதுபான விற்பனை கண்காணிக்கப்படுவதும், கட்டுப்படுத்தப்படுவதும் அவசியமாகும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.வாக்குப் பதிவுக்கு முன்னர் 4ம் தேதி முதல் வாக்குப் பதிவு முடியும் 6ம் தேதி வரை மூன்று நாட்கள் மதுபான விற்பனையை நிறுத்தி வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 3ம் தேதி மதுக்கடைகளின் மது வியாபாரம் கடந்த 2020 பிப்ரவரி மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 30 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த அளவு தாண்டினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பணியாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.