6 லட்சம் கடனுக்காக தன்மீதே துப்பாக்கிச்சூடு நடத்திய நீதிமன்ற ஊழியர்: 2 நண்பர்கள் கைது

புதுடெல்லி; 6 லட்சம் கடனை திருப்பிக்கொடுக்காமல் இருக்க நண்பர்களை வைத்து தன் மீதே துப்பாக்கிச்சூடு நடத்திய நீதிமன்ற ஊழியர் சிக்கினார்.டெல்லி பாட்டியாலா நீதிமன்ற ஊழியர் முகமது அப்பாஸ். கடந்த மார்ச் 17ம் தேதி அதிகாலை 1.20 மணி அளவில் இவர் துப்பாக்கிக்குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரித்த போது தனது வீடு கல்யாண்வாஸ் பகுதியில் இருப்பதாகவும், அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் தன்னை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்று விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த தாக்குதலில் ஹசன் முகமது என்பவர் மீது தனக்குசந்தேகம் இருப்பதாகவும், ஏனெனில் அவரது மாமனார் ஷா ஆலமிடம் தான் ரூ.6 லட்சம் கடன் பெற்று இருப்பதாகவும், அதனால் இந்த துப்பாக்கிச்சூடு நடந்து இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

இதுபற்றி போலீசார் விசாரித்த போது கடனை திருப்பிக்கொடுக்காமல் இருக்க முகமது அப்பாஸ் தான் துப்பாக்கிச்சூடு நாடகத்தை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது. இதற்காக கிழக்குடெல்லி கல்யாண்புரியை சேர்ந்த அப்பாஸ் நண்பர்கள் ஜூபர் அகமது, ரஷீத் ஆகியோர் உதவி செய்து இருப்பதும், இதில் ஜூபர் தான் துப்பாக்கியால் அப்பாஸ் தொடையில் சுட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இத்தாலியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: