போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொரோனா சோதனை கோரிய மனு தள்ளுபடி: பொதுநல வழக்கு தொடர மனுதாரருக்கு ஓராண்டு ஐகோர்ட் தடை

சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்,  அடுத்த ஓராண்டுக்கு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ய தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு தடையும் விதித்துள்ளது. தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர் பால்ராஜ் தாக்கல் செய்த மனுவில், சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் செய்யக்கூடிய வேட்பாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளதால், தேர்தலில் போட்டியிடும் 4,512 வேட்பாளர்களும் மருத்துவ பரிசோதனையை கட்டாயப்படுத்த  வேண்டும். பிரசாரங்களில் ஈடுபடும் வேட்பாளர்கள், குழந்தைகளை முத்தமிடுகிறார்கள். முதியோரை கட்டிப்பிடிக்கிறார்கள். அவர்கள் மூலம் கொரோனா பரவல் அதிகமாகும் அபாயம் உள்ளது என்று  கூறியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப்  பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்நோக்கத்துடன் அற்ப காரணங்களுக்காக, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து, மனுதாரருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அடுத்த ஓராண்டுக்கு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய அவருக்கு தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

Related Stories: