ரயிலில் இருந்து தவறி விழுந்து பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிய பெண் பயணி: ஆர்பிஎப் வீரர் காப்பாற்றினார்

தாம்பரம்: அனகாபுத்தூர், பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அமீதா பானு (50). இவரது சகோதரர் அன்சாரி (41). பரமக்குடி பகுதியை சேர்ந்தவர். அமீதா பானு உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அவரை பரமக்குடிக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்க முடிவு செய்த அன்சாரி சென்னை வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, அன்சாரி மற்றும் அமீதா பானு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து, பரமக்குடி செல்வதற்காக 8வது நடைமேடையில் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அந்த ரயிலை, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் என தவறாக நினைத்து அமீதா பானு ஏற முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக, ரயில் புறப்பட்டது.

இதனால், நிலை தடுமாறி கீழே விழுந்த அமீதா பானு  ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டார்.

இதனை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஜோஸ் பார்த்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அமீதா பானுவை மீட்டு காப்பாற்றினார். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஜோஸின் இந்த செயலை, பொதுமக்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உயரதிகாரிகள்  பாராட்டினர்.

Related Stories: