தாம்பரம்: கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. தீவிர நடவடிக்கைகளுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்த நிலையில், தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக, கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு விதிகளான, சமூக இடைவெளி பின்பற்றல், கிருமி நாசினி உபயோதித்தல் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்றவற்றை பின்பற்றாமல், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை போன்ற பொதுஇடங்களில் சுற்றித் திரிகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சந்திப் தலைமை வகித்தார். இதில், ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் தாரை, தப்பட்டை அடித்து, ரயில் பயணிகளிடம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றல், கைகளை சுத்தமாக வைத்துகொள்ளல் என்பன குறித்து, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், கடலூர் ரயில்வே துணை ஆய்வாளர் விஜயகுமார் உடபட பலர் பங்கேற்றனர்.