சென்னை: நீதிபதிகளை விமர்த்து பேசி வீடியோ வெளியிட்ட புகாரில் கைதான ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர், பெண் வழக்கறிஞர்கள், பெண் பணியாளர்கள் ஆகியோரை அவதூறாக பேசி பல வீடியோக்களை வெளியிட்டார். இதுதொடர்பாக வழக்கறிஞர் தேவிகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உள்ளிட்டோர் கொடுத்த புகாரில் கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி சென்னை மாநகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.தொடர்ந்து அவர் தாக்கல் செய்த 10 ஜாமீன் மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில், நீதிபதி கர்ணன் மீண்டும் 10 மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.