சென்னை: தமிழக முதல்வர் சார்பில் சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, சீமான் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது கடந்த 2019 செப்டம்பர் 14ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாகவும், வேண்டுமென்றே களங்கம் கற்பிக்கும் நோக்கில் அவதூறாக பேசியதாகவும், அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், அரசாணையை எதிர்த்தும் சீமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.