டெஹ்ராடூன் : 200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்திய இங்கிலாந்து என்று சொல்வதற்கு பதில் அமெரிக்கா என்று உத்தரகாண்ட் முதல்வர் திராத் சிங் ராவத் கூறியது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. உத்தரகாண்டில் முதல்வர் திராத் சிங் ராவத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் புதிதாக பதவியேற்று இன்னும் ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில் அடுத்தடுத்து சர்ச்சைகளில் இவர் சிக்கி வருகிறார். அண்மையில் பெண்கள் அணியும் கிழிந்த ஜீன்ஸ் குறித்து இவர் பேசிய பேச்சு, சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கிழிந்த ஜீன்ஸ்கள் போன்ற உடைகளை அணிந்து, அவர், மற்றவர்களுக்கு எப்படி முன்னுதாரணமாகத் திகழ முடியும்? என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் நைனிடாலின் ராம்நகரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் திராத் சிங் ராவத் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் திராத் சிங் ராவத்,200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தி, உலகம் முழுவதையும் ஆண்ட அமெரிக்காகூட, கொரோனா பாதிப்பிலிருந்து மீளப் போராடுகிறதுமறுபுறம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை காரணமாக, 130-135 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா இன்னும் நிம்மதியை உணருகிறது. இந்த நேரத்தில் நரேந்திர மோடிக்கு பதிலாக வேறு யாராவது பிரதமராக இருந்திருந்தால், இந்தியா மோசமான நிலையில் இருந்திருக்கும். ஆனால் அவர் (பிரதமர்) நமக்கு நிவாரணம் அளித்தார். ஒவ்வொருவரையும் அவர் பாதுகாத்தார்,இவ்வாறு அவர் தெரிவித்தார். கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் இந்தியாவுக்குள் நுழைந்த பிரிட்டிஷ் அரசு, கம்பெனி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து 1858 முதல் 1947ம் ஆண்டு வரை இந்திய துணைக் கண்டத்தை ஆட்சி புரிந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையில், இந்தியாவை அமெரிக்கா ஆட்சி புரிந்தது என்று பேசிய உத்தரக்காண்ட் முதல்வரது பேச்சு விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.