16ம் தேதி கணவர் இறந்த நிலையில் தேர்தல் பயிற்சிக்கு வருமாறு ஆசிரியைக்கு அழைப்பாணை: விடுப்பு தர கல்வித்துறை மறுப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 3 கட்ட பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. கடந்த 18ம் தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இது தொடர்பான தகவல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆசிரியர்களுக்கு சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (21ம் தேதி) 2வது கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க அழைப்பாணை அனுப்பப்பட்டு உள்ளதுடன், முதற்கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள், அதற்கான விளக்கத்தை அளிக்குமாறும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே களக்காடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையின் கணவர், கடந்த 16ம் தேதி திடீரென இறந்த நிலையில், ஆசிரியைக்கு 2ம் கட்ட தேர்தல் பயிற்சிக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டு உள்ளது. தனது நிலையை விளக்கி தேர்தல் பணியில் பங்கேற்க முடியாது என அவர் கடிதம் அனுப்பிய நிலையில் கல்வித்துறையினர் அதிகாரப்பூர்வமாக விடுப்பு தர மறுத்துள்ளனர். இவ்விவகாரத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகள், கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

Related Stories: