பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாவிட்டால் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியிடை நீக்கம்: மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் எச்சரிக்கை

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தவறிய அலுவலர்கள் இன்று நடைபெற உள்ள  பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். தவறும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்என்று மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 தொடர்பாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 5911 வாக்குச்சாவடி உள்ளது.  மேற்படி, 13.03.2021 அன்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தவறிய வாக்குசாவடி அலுவலர்களுக்கு இன்று (21ம் தேதி ஞாயிற்றுக் கிழமை) மீண்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. இது தொடர்பான  பணிஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணை வருவாய் துறை அலுவலர்களால், வாக்குச்சாவடி, அலுவலர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் மூலம் வழங்கப்படும். மேலும் வாக்குச்சாவடி அலுவலர்களின் அலைப்பேசி வழியாக குறுந்தகவல் மூலமாகவும்  பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் மற்றும் நேரம் போன்ற விபரங்கள் தெரிவிக்கப்படும்.

எனவே, இன்று நடைபெறவுள்ள பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள தவறும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது இந்திய தேர்தல் ஆணையத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 பிரிவு 134 மற்றும் இந்திய தண்டனைச்  சட்டத்தின்படி பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர், ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: