திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சிப்காட் உருக்காலைகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்படுகின்றன. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு அங்கிருக்கக்கூடிய ஒரு கிணற்றில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த போது கிணற்றில் ஒரு மூட்டை மிதந்து கொண்டிருந்தது. அதனை பிரித்து பார்த்த போது ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது. சிறுவர்கள் அதனை விளையாட்டு பொருள் என நினைத்து கல் வைத்து உடைத்ததில் சிதறியது. இதில் பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் அது ஏகே 47 ரக துப்பாக்கிகள், சிறிய ரக துப்பாக்கிகள், பெரிய ரக துப்பாக்கிகள் என ஏராளமானது கிடைத்தது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இருக்கக்கூடிய உருக்கு ஆலைகளிலும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குவியல் குவியலாக ராக்கெட் லஞ்சர்ஸ் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து அப்போது விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 2008ல் இந்த விசாரணை நடத்தப்பட்டபோது பூந்தமல்லியில் இருக்கக்கூடிய நீதிமன்றத்தில் இந்த விசாரணையானது மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வந்துள்ளது.