×

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் 1000 அடிக்கு போர்வெல் துளையிட்ட வெளிமாநில இளைஞர்கள் விரட்டியடிப்பு

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு விஸ்வநாதன் நகர் பூங்காவில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் போர்வெல் போடும் பணியில் சில வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது சந்தேகம் ஏற்படும் விதமாக அவர்கள் கெமிக்கல்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் இவை என சந்தேகமடைந்து போர்வெல் பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பணிக்கு ஈடுபடுத்தப்பட்ட வெளிமாநில இளைஞர்கள் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் விசாரித்தபோது, மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் நடைபெறும் இந்த பணி எங்களது ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அவர்கள் அனுமதி பெறும்போது 600 அடிகளில் 2 போர்வெல்கள் அமைப்போம், ஒன்றை பேரூராட்சிக்கு ஒப்படைத்துவிடுவர் மற்றொன்றை பூட்டி சீல்வைத்துவிட்டு அவ்வப்போது நீர்மட்டத்தை சோதனை செய்ய பயன்படும் என அவர்கள் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் பேருராட்சிக்கு உட்பட்ட ரெட்ரோஸ் வீதியில் நில உரிமையாளரிடம் இலவசமாக போர் அமைத்து தருவதாக ஏமாற்றி தனியார் நிறுவன பணியாளர்கள் 650 அடிகளுக்கு மேல் துளையிட்டதால் அப்பகுதி பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக தற்போது பொதுமக்கள் மத்திய அரசின் நிலத்தடிநீர் வாரியத்தின் பணியை  தடுத்து நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டம் பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அப்பகுதி பொதுமக்கள் மத்திய அரசின் போர் அமைக்கும் அனைத்து திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



Tags : Through the Jaljeevan scheme of the Central Government Chasing outfield youths drilled 1000 feet borewell
× RELATED மூணாறு அருகே காஸ் தட்டுப்பாடு; காலி...