கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் பகுதியில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பேருந்து படியில் பயணம் செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காட்பாடியிலிருந்து லத்தேரி, கே.வி.குப்பம் வழியே குடியாத்தம் பகுதிக்கு 20 முதல் 30 வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சில பேருந்துகள் காட்பாடி- கே.வி.குப்பம் வழியே மேல்மாயில், மேல்மாங்குப்பம், துரைமூலை ஆகிய பகுதிகளுக்கும், வேலூரிலிருந்து கே.வி.குப்பம், வடுகன்தாங்கல் வழியே கீழ்மூட்டுக்கூர் ஆகிய பகுதிகளில் செல்கிறது.
காலையிலே கே.வி.குப்பம் கிராமங்களில் இருந்து காட்பாடி சந்தைக்கும், பள்ளிகள், கல்லூரிகள் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். அவ்வாறு செல்லும் அரசு பேருந்தில் கூட்ட நெரிசலால் ஆபத்தை உணராமல் மாணவர்கள் படியில் பயணம் செய்து வருகின்றனர். எனவே வடுகன்தாங்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அச்சமின்றி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
