கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட 3 வாலிபர்கள் கைது

தண்டையார்பேட்டை: யானைகவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு சவுகார்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்தின்பேரில் நின்றிருந்த 3 வாலிபர்களை மடக்கி விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர்கள் கள்ள நோட்டு மாற்றும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சூலை பட்டாளம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த விமல்குமார்(30), கொடுங்கையூர் எருக்கஞ்சேரியை சேர்ந்த சோகன் பட்டேல்(25), வியாசர்பாடி எம்கேபி நகரை சேர்ந்த செல்லாராம்(45) ஆகியோரை கைது செய்தனர். மேலும், இவர்கள் ஆக்ராவிலிருந்து கள்ள நோட்டு வாங்கி வந்து சென்னையில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: