பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் மனு தாக்கல் முதல்நாளில் மனு தாக்கலுக்காக 17 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. குன்னத்தில் சுயேச்சை ஒருவர் மனுதாக்கல் செய்தார்.சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (12ம்தேதி) தொடங்கியது.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல்செய்ய விரும்புபவர்கள், பெரம்பலூர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான, பெரம்பலூர் மதரஸா சாலையிலுள்ள சப்.கலெக்டர் அலுவலகத்திலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய விரும்புபவர்கள், பெரம்பலூர் அரியலூர் சாலையிலுள்ள குன்னம் தாலுகா அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை வழங்க, பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வெங்கட பிரியா ஏற்பாடுசெய்துள்ளார்.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர்(தனி) மற்றும் குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் இளம்பை தமிழ்ச்செல்வன், ஆர்.டி.இராமச்சந்திரன், ஆகிய இருவரும் வருகிற 15ம் தேதி பெரம்பலூர் மற்றும் குன்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.