திருத்தணி: திருத்தணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று காலை திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள சரஸ்வதி மில் அருகே, திருத்தணி தோட்டக்கலை துணை அலுவலர் அண்ணாதுரை தலைமையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஆந்திர பதிவெண் கொண்ட ஒரு வேன் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் ரூ. 3 லட்சத்து 29 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது . அவர்களிடம், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் திருப்பதியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனது வீட்டு திருமணத்துக்காக காஞ்சிபுரம் சென்று பட்டுப்புடவை எடுக்க குடும்பம் மற்றும் உறவினர்கள் 11 பேருடன் சென்றது தெரிய வந்தது. பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் திருத்தணி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் சத்தியாவிடம் ஒப்படைத்தனர்.பட்டுப்புடவை எடுக்க சென்றவர்களிடம், அதிகாரிகள், ‘’உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்’ என்று கூறினர்.